சென்னை,
இன்று வெளியாகியுள்ள லோக் போல் சர்வே முடிவுகளில் திமுக கூட்டணி 40.1% வாக்கு சதவீதத்துடன் 181 முதல் 189 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக கூட்டணி 29% வாக்குகளைப் பெற்று 38 முதல் 42 இடங்கள் வரை பிடிக்கும் என தெரிகிறது.
தமிழக வெற்றி கழகம் (தவெக) 23.9% வாக்குகளைப் பெற்று 8 முதல் 10 தொகுதிகள் வரை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி 4.9% வாக்குகளைப் பெற்றாலும் இடங்களைக் கைப்பற்றாது என்றும், மற்றவர்கள் 2.1% வாக்குகளைப் பெறுவார்கள் என்றும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
அதேபோல், யார் முதல்-அமைச்சராக வேண்டும்? என்ற கேள்விக்கு 41 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலின் என்றும், 24.1 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமி என்றும், 27.1 சதவீதம் பேர் விஜய் என்றும், 7.8 சதவீதம் பேர் மற்றவர்கள் என்றும் பதில் அளித்துள்ளனர். 1,17,000 நபர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அடுக்கு சீரற்ற மாதிரி முறை கையாளப்பட்டுள்ளது.
