டாக்கா
வங்காளதேசத்தின் காமில்லா நகரில் பதுவா பஜார் பகுதியில், டாக்கா-சிட்டகாங் நெடுஞ்சாலை வழியே வாகனங்கள் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும். இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள ரெயில்வே கிராசிங்கில் பஸ் ஒன்று இன்று அதிகாலை கடந்து சென்றுள்ளது. அப்போது அந்த வழியே வந்த ரெயில், பஸ்சின் மீது மோதியது.
இந்த விபத்தில் ரெயில் என்ஜின், ஒரு கி.மீ. வரை பஸ்சை இழுத்து சென்றுள்ளது. இதன்பின்னரே ரெயில் நின்றுள்ளது. இதனால், பஸ் பலத்த சேதமடைந்தது. பஸ்சில் பயணித்தவர்கள் பயத்தில் அலறினார்கள். எனினும், 7 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் என 12 பேர் பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர்.
விபத்தில் சிக்கிய பஸ் உருக்குலைந்து போனது. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு காமில்லா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதனால், டாக்கா-சிட்டகாங் ரெயில் வழியில் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. 3 மணிநேர போராட்டத்திற்கு பின்னர், விபத்தில் சிக்கிய வாகனங்கள் அகற்றப்பட்டு உள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
