ஐதராபாத்
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் பதக்பேட் பகுதியில் வெங்கடாத்ரி காலனியில் வசித்து வந்தவர் ஹீமா பிந்து (வயது 20). பி.எஸ்சி., பட்டப்படிப்பு படித்து வந்த இவர் பூனை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த பூனை திடீரென மரணம் அடைந்துள்ளது.
இதனால், மன வருத்தத்தில் இருந்த பிந்து யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், திடீரென அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
இதுபற்றி மீர்பேட் காவல் நிலைய ஆய்வாளர் சங்கர் குமார் கூறும்போது, கல்லூரி மாணவி ஹீமா பிந்து தத்தெடுத்து வளர்த்து வந்த பூனை திடீரென மரணம் அடைந்துள்ளது. இந்த வருத்தத்தில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்திருக்கிறார்.
இதனை அறிந்து, உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் மரணம் அடைந்து விட்டார் என கூறினார். அன்புடன் வளர்த்த பூனை உயிரிழந்த துயரத்தில் கல்லூரி மாணவி மனதளவில் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
அவர் நன்றாக படிக்க கூடிய மாணவி என்றும் அமைதியாக காணப்படுபவர் என்றும் அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். இந்த சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
