வாஷிங்டன் டி.சி.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்து வரும் தாக்குதலில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
மேற்காசிய போரால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் நேரடியாக பாதிக்கப்பட்டு உள்ளன. வளைகுடா நாடுகளும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று கூறும்போது, எனக்கு ஒரு வாய்ப்பு இருந்தால் ஈரானின் எண்ணெய் வளங்களை நான் எடுத்து கொள்வேன். நாங்கள் எடுத்து கொள்வதற்காகதான் அது உள்ளது என்று கூறினார்.
எனினும், ஈரானிடம் இருந்து போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் முன்மொழிவு ஒன்று தன்னுடைய அரசுக்கு வந்து சேர்ந்துள்ளது என்று டிரம்ப் கூறினார். அவர்கள் தற்போது பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
அது ஒரு முக்கிய நடவடிக்கை என குறிப்பிட்டார். ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க கூடாது என்றும் அவர் கூறினார். ஆனால், ஈரான் ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், ஈரானின் எரிசக்தி மற்றும் பொதுமக்களின் உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் மீண்டும் எச்சரித்து உள்ளார்.
