விஜய் மீது மர்ம பொருளால் தாக்குதல்..

தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது. அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில்தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தென் மாவட்டங்களில் தனது கட்சியை வலுப்படுத்தும் வகையிலும், வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுப்பட்டு வருகிறார். சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி,உள்ளிட்ட மாவட்டங்களில் தன்னுடைய பிரச்சாரத்தை நிறைவு செய்த விஜய் இன்று காரைக்குடி, சிவகங்கையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்ற அவர் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக காரைக்குடி செல்கிறார்.. அப்போது வழி நெடுகிலும் தவெக தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பூக்களை தூவியும், மாலைகள் போட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் கோவிலூர் அருகே பிரச்சார வாகனத்தில் விஜய் சென்று கொண்டிருந்த போது, அவர் மீது மர்ம பொருள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சார வாகனத்தின் மீது நின்று தொண்டர்களை நோக்கி கையசைத்து கொண்டிருந்தார். திடீரென மஞ்சள் நிற துணிப்பை போன்று இருந்த மர்ம பொருள் விஜய் தலையில் பட்டது.

விஜய் மீது விழுந்த மர்ம பொருள் என்ன..? அதை வீசியது யார் ? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே விஜய் பிரச்சாரத்திற்கு காவல்துறையினர் போதிய பாதுகாப்பு வழங்கப்பட வில்லை என தவெகவினர் குற்றசாட்டு வைத்துள்ள நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link