சென்னை,
“விண்ணை தாண்டி வருவாயா” படம் குறித்து பேட்டி அளித்த இயக்குனர் கவுதம் மேனன், படத்துக்கு முதலில் தான் யோசித்த கிளைமேக்ஸ் வேறு என்று கூறினார்.
அவர் பேசுகையில், “விண்ணை தாண்டி வருவாயா படத்துக்கு நான் யோசித்த கிளைமேக்ஸ் வேறு. சிரஞ்சீவி படத்தை சிம்பு இயக்குவார். அப்போது சோகமாக இருக்கிறார்.
காதல் விஷயத்தை கேள்விப்பட்ட சிரஞ்சீவி ஹெலிகாப்டரில் அவரை அழைத்து வந்து திரிஷாவுடன் சேர்த்து வைக்கிறார் என வைத்திருந்தேன். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்தவுடன் அது எனக்கே மோசமாக தோன்றியது. பின்னர் இப்போதைய கிளைமேக்ஸ்க்கு மாற்றி எழுதினேன்” என்றார்.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. பின்னணியில் ஏ.ஆர் ரகுமான் இசை, திரையில் கார்த்திக் ஜெஸியின் காதல் ரசிகர்களைப் படம் வெளியாகி பல ஆண்டுகள் கழித்தும் கட்டிப் போட்டுள்ளது. 2010ம் ஆண்டு வெளியான இப்படம் இன்றும் காதலர்களின் விருப்பப் படமாகவே நீடிக்கிறது.
