தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் ஏற்கனவே பல பாலியல் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது ஜாமீனில் இருக்கும் தர்ம முனீஸ்வரன் மாணவியை கொலை செய்துள்ளார்.
விளாத்திகுளம் 12 ஆம் வகுப்பு மாணவி கொலை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த மார்ச் 10 ஆம் தேதி இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிப்தற்காக காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். நெடு நேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தால், மறுநாள் குடும்பத்தினர் மாணவியை தேடி சென்றிருக்கின்றனர். அப்போது கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குற்றவாளி கைது
இதனையடுத்து மாணவியின் கொலையில் சமபந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள், கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணிகள் தீவிரமாக நடந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் சாய்ல்குடியை சார்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபர்
கொலை செய்யப்பட்ட மாணவியின் விரல் நகங்களில் இருந்த டிஎன்ஏ மாதிரியுடன், கைதாகியுள்ள முனீஸ்வரன் டிஎன்ஏ ஒத்துப்போயுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு எட்டயபுரத்தை சார்ந்த 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
திமுக, மநீம தொகுதி பங்கீடு நிறைவு.. எத்தனை சீட் ஒதுக்கீடு.. நீடிக்கும் ஒரேயொரு சிக்கல்.. கமல் எடுக்கப்போகும் முக்கிய முடிவு
திருட்டு பைக்கில் விளாத்திகுளம் வந்த குற்றவாளி
இந்த வழக்கில் தற்போது ஜாமீனில் இருப்பவர், காவல் நிலையத்தில் கையெழுத்து போடுவதற்காக வந்துள்ளார். அந்த சமயத்தில் வேடநத்ததில் மாணவியை கொலை செய்துள்ளார். மேலும், பார்த்திபனூரை சார்ந்த ஒருவரின் பைக்கை திருடி, குற்றவாளி விளாத்திகுளம் வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முக்கிய ஆதரமாக மாறிய சிசிடி கேமரா
விளாத்திகுளம் காட்டுக்குள் இருக்கும் காற்றாலை ஒன்றில் இருந்த சிசிடிவி கேமராவில் திருடப்பட்ட பைக்கின் நம்பரை போலீசார் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து அதனை வைத்து தேடும் போது, பைக்கை திருடிய தர்ம முனீஸ்வரன் வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி நீதிமன்றம் சென்ற தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனை வைத்து குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
உடலை வாங்க குடும்பத்தினர் சம்மதம்
தொடர்ந்து மாணவியை எதற்காக கொலை செய்தார்? எப்படி கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது சம்பந்தமான தகவல்கள் அடுத்தக்கட்ட விசாரணையில் தெரியவரும். இதனிடையில் விளாத்திகுளம் மாணவியின் உடலை பெறாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த குடும்பத்தினர், தற்போது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மாணவியின் உடலை பெறுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
