விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் சிக்கியது எப்படி? எஸ்பி விளக்கம்!
அறிவியல் பூர்வமான வழிமுறைகள்
இந்த வழக்கின் விசாரணை குறித்து விவரித்த மாவட்ட எஸ்பி மதன், குற்றவாளியைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான வழிமுறைகளை விரிவாக விளக்கினார். சம்பவம் நடந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 900 ஆண்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அவர்களின் பின்னணி மற்றும் செயல்பாடுகள் குறித்து அப்பகுதி மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, சந்தேகத்திற்குரிய நபர்கள் பட்டியலிடப்பட்டனர். குற்றப்பின்னணி கொண்டவர்கள் மற்றும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர். குறிப்பாக, சம்பவம் நடந்த பகுதியில் நேரடி சிசிடிவி கேமராக்கள் இல்லாதது பெரும் சவாலாக இருந்தது. இருப்பினும், அக்கிராமத்தைச் சுற்றியுள்ள சாலைகள் மற்றும் காற்றாலைப் பகுதிகளில் இருந்த 90-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளைக் காவல்துறையினர் அணு அணுவாக ஆய்வு செய்தனர்.
டிஎன்ஏ பரிசோதனை
குற்றவாளியைக் கண்டறிய டிஎன்ஏ (DNA) பரிசோதனை உள்ளிட்ட நவீன தடய அறிவியல் முறைகளும் பயன்படுத்தப்பட்டன. சந்தேகத்திற்குரிய 5 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. “வெறுமனே ஒரு நபர் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றார் என்பதற்காக நாங்கள் யாரையும் கைது செய்யவில்லை; அனைத்து அறிவியல் ஆதாரங்களும் ஒரு புள்ளியில் இணைந்த பிறகுதான் தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டார்” என்று எஸ்பி மதன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், கைது செய்யப்பட்ட நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட போதிலும், சேகரிக்கப்பட்ட ஆதாரங்களுடன் அவரது வாக்குமூலத்தைப் பொருத்திப் பார்த்த பின்னரே நடவடிக்கை உறுதி செய்யப்பட்டது. எந்தவிதமான அரசியல் அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல், உண்மையான குற்றவாளியைச் சட்டத்தின் முன் நிறுத்தியிருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
150-க்கும் மேற்பட்ட காவலர்கள்
கடந்த 9 நாட்களாக 150-க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உறக்கமின்றி இந்தப் பணியில் ஈடுபட்டதைப் பாராட்டிய எஸ்பி, இந்த வழக்கில் மிக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று உறுதியளித்தார். இக்குற்றத்தில் தர்ம முனீஸ்வரனுக்கு மட்டும் தொடர்பு உள்ளதா அல்லது வேறு எவருக்கேனும் உடந்தை இருக்கிறதா என்பது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, அவரது பெயர் அல்லது புகைப்படத்தை ஊடகங்களிலோ சமூக வலைதளங்களிலோ பகிரக் கூடாது என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தர்ம முனீஸ்வரனுக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு நீதிமன்றம் மூலம் உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத் தருவதே காவல்துறையின் இலக்கு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
