ஈரோடு,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
வரும் 23-ம் தேதி நடைபெற இருக்கும், தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் ஆட்சியை விரட்டியடித்து, தமிழக மக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சியை வழங்கிட உறுதி கொண்டிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியில் களம் காணும் நமது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் M.யுவராஜாவை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் அண்ணன் ஜி.கே. வாசனுடன் பங்கேற்று உரையாற்றினேன்.
கடந்த 5 ஆண்டுகளில், தமிழகத்தில் படுகொலைகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும், போதைப்பொருள் புழுக்கமும் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழக அரசில் ஒரு சப்ஸ்டிடியூட் அமைச்சராக இருப்பவர் முத்துசாமி. செந்தில் பாலாஜி சிறைக்கு செல்ல வேண்டிய சூழல் வந்ததால் டாஸ்மாக் துறையை முத்துசாமியிடம் கொடுத்தார்கள். பொறுப்பேற்றவுடன் சாராயத்தை 30ml பாக்கெட்டுகளில் விற்கவேண்டும் என்ற வினோதமான யோசனையை கொடுத்த பெருமைக்குரியவர் அவர்.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் அதிகபட்சமாக தமிழகத்தில் 21,122 விபத்துகள் நடந்துள்ளன. இதில் பெரும்பாலான விபத்துகள் குடிபோதையில் நடந்தவைதான். குடிபோதையில் நடக்கும் குற்றங்களும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. நமது நாட்டின் நெற்களஞ்சியமாக திகழ்ந்த தமிழகம் இன்று நெல் உற்பத்தியில் 10-ம் இடத்திற்கு சென்றுள்ளது. காவிரி நீர் குறைவு, நெல் சாகுபடி குறைவு என விவசாய வளர்ச்சியை கேள்விக்குறியாக்கியது தான் திமுக ஆட்சி செய்துள்ள சாதனை.
எனவே, தீயசக்தி திமுகவின் காட்டாட்சியை அகற்றிடவும், பாமர மக்களின் நலன் காக்கும், மக்களுக்கான ஆட்சி அமைந்திடவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஈரோடு மேற்கு தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் M.யுவராஜாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஈரோடு மக்கள் வெற்றி பெற செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்! தமிழகம் செழிக்கட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
