வேட்பாளர்கள் மீது பாலியல், மோசடி வழக்குகள்  : தவிக்கும் தமிழக வெற்றிக் கழகம்  – Kumudam

பூந்தமல்லி தொகுதி தவெக வேட்பாளர் மீது பெண் நிர்வாகி கொடுத்த பாலியல் புகாரில் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த பரபரப்பு ஒயாத நிலையில், தற்போது தவெக வாணியம்பாடி வேட்பாளர் மீது மோசடி புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தவெக சார்பில் கடந்த 30-ம் தேதி  அக்கட்சியின் தலைவர் விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து தவெக வேட்பாளர்கள்  மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சையத் புர்ஹாதீன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தற்போது அம்பலமாகி வருகிறது.

குறிப்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களின் பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி போலி நிறுவனங்கள் நடத்தி சுமார் ரூ.600 கோடி மோசடி செய்தாக அவர் மீது சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளதை வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில்.அவரை நேரில் ஆஜராக 5 முறை சம்மன் அனுப்பியும் தனது உடல் நலம் காரணம் காட்டி ஆஜராகவில்லை என தெரிகிறது.

ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் வாணியம்பாடியில் உள்ள இவரது வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்தில் வேட்பாளர் சையத் புர்ஹாதீன் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு  நிலுவையில் உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவருக்கு தவெக சார்பில் சீட் வழங்கப்பட்டிருப்பது தவெக தலைமைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

“உண்மைக்கு புறம்பானது!”

தவெக-வின் வெற்றி உறுதி என்னும் அச்சத்தால் 140 போலி நிறுவனங்கள், உருவாக்கி அரசுக்கு ரூ.600 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தீய சக்திகள் என்மீது அவதூறு பரப்பி வருகின்றனர்; இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது; பொய்யான தகவலை பரப்பி வருபவர்களை நான் சட்டரீதியாக எதிர்கொள்வேன் வாணியம்பாடி தவெக வேட்பாளர் வழக்கறிஞர் சையத் புர்ஹானுதீன் பேட்டி

Source link