வேட்புமனுத் தாக்கல்
சட்டமன்ற தேர்தலுக்காக கடந்த சில நாட்களாக தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து தீவிரமான பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார் இபிஎஸ். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் எட்டாவது முறையாக போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரைக்கும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என விருப்பப்படுகின்றனர். ஏற்கனவே 2021 தேர்தலில் 93 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடியில் வெற்றி பெற்றேன். இந்த தேர்தலில் இன்னும் கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் அத்தனை திட்டங்களை நான் செயல்படுத்தி உள்ளேன்.
அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்
எடப்பாடி மட்டுமல்லாமல் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். எனவே எனக்கு நம்பிக்கை உள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் பெருமளவில் வெற்றி பெறுவார்கள் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். மேலும், 210 தொகுதிகளில் எங்களுடைய கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தற்போது நடக்கவுள்ளது சட்டமன்ற தேர்தல்.
அப்படி இருக்கும்போது டெல்லியுடன் எதற்காக திமுக போட்டி போட வேண்டும். திமுக ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டுள்ள அதிமுகவின் திட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனிடையில் தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் வழங்குவதாக இபிஎஸ் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை செய்தியாளர்கள் முன்பாக வெளியிட்டு பரபரப்பினை கிளப்பியுள்ளார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட ஆதாரம்
இபிஎஸ் தனது பரப்புரைகளில் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக தேமுதிகவை அரை பர்சன்ட் ஓட்டு சதவிகிதம் வைத்துள்ளதாக கூறி கொண்டிருக்கிறார். இதனால் அப்செட்டான பிரேமலதா விஜயகாந்த், தற்போது ராஜ்ய சபா சீட் வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டு வழங்கிய ஒப்பந்தத்தை செய்தியாளர்களிடம் காண்பித்துள்ளார். தேமுதிகவை ஐசியூவில் இருக்கும் கட்சி என்று கூறி வரும் இபிஎஸ், ஐசியூவிற்கு போகாமல் இருக்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன் என கடுமையாக விமர்சித்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
கூட்டணி மாறி விட்டார்
இது சம்பந்தமாக இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, 2026 ஆம் ஆண்டு எம்பி சீட் தருவதாக கூறினோம். அவருடைய மனநிலை வேறதாக இருந்தது. கூட்டணி மாறி விட்டார் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து இபிஎஸ்ஸின் இந்த பேச்சுக்கு பிரேமலதா விஜயகாந்த் தரப்பில் இருந்து என்ன மாதிரியான பதிலடி வருமென்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
