தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்து அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.. இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
அந்த வகையில் தவெக சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை சமீபத்தில் அக்கட்சி தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.. விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. கடந்த 30-ம் தேதி பெரம்பூரில் விஜய் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.. அன்றைய தினமே பெரம்பூரில் இருந்து தனது பிரச்சாரத்தையும் விஜய் தொடங்கினார்..
இதை தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய், திருச்சியிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்.. ஆனால் விஜய் பெரம்பூர் தாக்கல் செய்த வேட்பு மனுவுக்கும், திருச்சியில் தாக்கல் செய்த வேட்பு மனுவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
பெரம்பூர் தொகுதி மனுவில், தன் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்று விஜய் குறிப்பிட்டிருந்தார்.. நேற்று தாக்கல் செய்யப்பட்ட திருச்சி கிழக்கு தொகுதி மனுவில், தன் மீது 2 வழக்குகள் இருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.
கடந்த 30-ம் தேதி பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு, பெரம்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியது மற்றும் ஆம்புலன்ஸ் செல்ல இடையூறாகக் கூட்டத்தைக் கூட்டியது போன்ற புகார்களின் கீழ் 5 பிரிவுகளில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே பெரம்பூர் வேட்புமனுவி இந்த வழக்கு பற்றி குறிப்பிடாதது ஒன்றும் பிரச்சனை இல்லை..
ஆனால் கடந்த ஆகஸ்ட் 2025-இல் மதுரையில் நடைபெற்ற தவெக-வின் இரண்டாவது மாநில மாநாட்டின் போது, மேடை அருகே வந்த ஒரு தொண்டரைப் பாதுகாவலர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் விஜய் மற்றும் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பெரம்பூர் வேட்புமனுவில் இந்த வழக்கு குறித்து விஜய் குறிப்பிடாதது சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.. பெரம்பூரில் விஜய் வேட்புமனு தள்ளுபடியாக கூட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.. ஆனால் திருச்சி கிழக்கு தொகுதில் விஜய் இந்த வழக்குகளையும் குறிப்பிட்டுள்ளார்.. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது வயதையும் மாற்றி மாற்றி குறிப்பிட்டுள்ளார்.. கடந்த 30-ம் தேதி பெரம்பூரில் தாக்கல் செய்த விஜய் தனது வயதை 52 என்று குறிப்பிட்டுள்ளார்.. நேற்று திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது வயது 51 என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.. குற்ற வழக்கு, வயது தொடர்பான விவரங்களை விஜய் மாற்றி மாற்றி குறிப்பிட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது..
