வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை 10ந்தேதி பயன்பாட்டுக்கு வருமென அறிவிப்பு

சென்னை,

சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வரும் நிலையில் அதனை பரங்கிமலை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று 2008-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. பரங்கிமலை புறநகர் ரெயில் நிலையத்தோடு இணைக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ஆனால் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டம் காலதாமதம் ஆனது. கோர்ட்டு வழக்குகளால் பணிகள் முடங்கிய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விரைவுபடுத்தப்பட்டு தற்போது நிறைவு பெற்றுள்ளது.

அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று அதிவேக சோதனை ஓட்டம் சிறப்பாக நடந்தது. அதாவது, வேளச்சேரி-பரங்கிமலை இடையான 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிறப்பு ரெயில் மூலம் இன்று மதியம் 1.30 மணி முதல் 6 மணி வரை இந்த சோதனை ஓட்டம் நடந்தது. முதன்மை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.

இந்த நிலையில், வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை 10ந்தேதி பயன்பாட்டுக்கு வருமென தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம், பயணிகளின் பல வருட ஏக்கம் தற்போது நிறைவடைய உள்ளது.

Source link