வாஷிங்டன்,
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் 28 ம் தேதி போரை தொடங்கியது. இந்த போர் ஒரு மாதத்தை கடந்தும் நடந்து வருகிறது. அமெரிக்காவின் நட்பு நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதோடு, ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் சவுதி அரேபியா, கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்தார். அதோடு ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. காலக்கெடு முடிவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு டிரம்ப், ”ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும். இல்லாவிட்டால் ஈரானின் நாகரீகம் அழிக்கப்படும். அதில் இருந்து அவர்களால் மீண்டு வர முடியாது” என்று மிரட்டல் விடுத்திருந்தார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிட்டு ஈரான் – அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதையடுத்து போர் 2 வாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக டிரம்ப் அறிவித்தார். அமெரிக்கா, இஸ்ரேல் சார்பில் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது என கூறப்பட்டது. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் திறந்தது. கப்பல்கள் வழக்கம்போல் பயணிக்க தொடங்கின. இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை மூடி உள்ளதாக ஈரான் அரசு தெரிவித்தது. போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறி உள்ளது என்றும், இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு அனுமதியில்லை என்றும், அனைத்து கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்காவிட்டால், ஈரான் மீது இதுவரை இல்லாதவகையில் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சோசியல் வலைதளத்த்தில் கூறியிருப்பதாவது:-
ஏற்கனவே பெருமளவில் பலவீனமடைந்த எதிரியை, கொன்று குவித்து அழிப்பதற்கு தேவையான மற்றும் பொருத்தமான அனைத்து அமெரிக்க கப்பல்கள், விமானங்கள், மற்றும் ராணுவ வீரர்கள், கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் பிறவற்றுடன், எட்டப்பட்ட உண்மையான ஒப்பந்தம் முழுமையாக கடைப்பிடிக்கப்படும் வரை ஈரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அவர்கள் (அமெரிக்க ராணுவம்) நிலைநிறுத்தப்பட்டிருப்பார்கள்.
ஏதேனும் ஒரு காரணத்தால் அது நிறைவேற்றப்படாவிட்டால், (அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு), அப்போது, சிறந்ததாகவும், வலிமையானதாகவும் “துப்பாக்கிச் சூடு” தாக்குதல் தொடங்கப்படும். அணு ஆயுதத் தடை, ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு உள்ளிட்ட நிபந்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை. இதற்கிடையில், நமது மாபெரும் ராணுவம் ஆயுதங்களை தயார் செய்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. உண்மையில், தனது அடுத்த வெற்றியை எதிர்நோக்கி எங்கள் ராணுவம் இருக்கிறது. அமெரிக்கா மீண்டும் வந்துவிட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
