ஹார்மூஸ் ஜலசந்தியை நெருங்கும் ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன் டி.சி.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதல் 6 வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது. இதற்கிடையே ஈரான், அமெரிக்கா இடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முன்வந்தது.

இதனை தொடர்ந்து, அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையில் ஈரானின் வெளியுறவு மந்திரி சையது அப்பாஸ் அராக்சி, ஈரான் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி அக்பர் அகமதியன், ஈரானின் மத்திய வங்கி கவர்னர் அப்துல் நாசர் ஹிம்மதி ஆகியோருடன், ஈரான் நாடாளுமன்றத்தின் பல்வேறு உறுப்பினர்களும் பாகிஸ்தானுக்கு வருகை தந்தனர்.

இந்த குழுவில் பாதுகாப்பு, அரசியல், ராணுவம், பொருளாதாரம் மற்றும் சட்டம் தொடர்பான பிரதிநிதிகள் இருந்தனர். அமெரிக்கா சார்பில் அந்நாட்டு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினரும் பாகிஸ்தானுக்கு வருகை தந்தனர். 6 வாரங்களாக நீடித்த போரை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியாகவும், அதற்கான முதல் சந்திப்பாகவும் இது அமைந்தது.

எனினும், இஸ்லாமாபாத் நகரில் உள்ள செரீனா ஓட்டலில் ஏறக்குறைய 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என வான்ஸ் கூறி விட்டு குழுவினருடன் நாடு திரும்பினார்.

இந்த சூழலில், ஹார்மூஸ் ஜலசந்தியை நெருங்கும் ஈரானிய கப்பல்களை உடனடியாக அழிக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்து உள்ளார். அதற்கு அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது என்றும் கூறினார். ஏற்கனவே, ஈரானின் கடற்படை அழிக்கப்பட்டு விட்டது.

எனினும், ஈரானிடம் சிறிய ரக அதி விரைவு கப்பல்கள் உள்ளன. கடலில் போதை பொருள் படகுகளை அழிக்க பயன்படுத்திய நடைமுறையை கொண்டு அவை அழிக்கப்படும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். விரைவாக செல்ல கூடிய ஈரானின் கப்பல்கள் இன்னும் உள்ளன. அவற்றை அழிக்க வேண்டி உள்ளது என்றும் அவர் எச்சரிக்கையாக கூறியுள்ளார்.

Source link