வாஷிங்டன்,
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடுத்துள்ள போர் தீவிரமடைந்து வருகிறது. இன்று 12-வது நாளாக நீடிக்கும் இப்போரில் இருதரப்பும் தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றன. இதில் ஈரான் ராணுவ உள்கட்டமைப்புகள், போர்க்கப்பல்கள், விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரானின் 44 போர்க்கப்பல்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.
இந்த நிலையில் கடலில் கண்ணிவெடிகளை பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை தாக்கி அழித்ததாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி அருகே 16 கண்ணிவெடி பதிக்கும் கப்பல்கள் உட்பட பல ஈரான் கடற்படை கப்பல்களை தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்க ராணுவ மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டது.
உலகின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம் நடைபெறும் ஹோர்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் ஈரான் கண்ணிவெடிகளை வைத்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், தவறினால் முன்பு கண்டிராத அளவில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில் 16 கண்ணிவெடி படகுகள் அழிக்கப்பட்டுள்ளன.
