மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் ஊதியத்தை உயர்த்தி,மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலைத் திட்டம், 2008-ம் ஆண்டு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. ஊரக பகுதிகளில் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒரு நபருக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்குவதை இந்த சட்டம் உறுதி செய்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் 100 நாள் வேலைத் திட்டத்துக்கான ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களுக்கு இதுவரை ரூ.294 வழங்கப்பட்டு வந்தது. தற்போது மாநில வாரியாக ஊதியம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஊதியத்தை ரூ.294-ல் இருந்து 319-ஆக உயர்த்தி மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று இந்த அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

