13 பேர் பலி.. பேருந்து லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கதிஹார் மாவட்டம் கோதா வட்டாரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை மாலை பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள பூர்ணியா மாவட்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட தகவல்களின் படி, பேருந்து ஓட்டுநர் வாகன கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த கோர விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பீகார் முதலமைச்சர் நிதீச் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ. 2 லட்சம் இழப்பீடும் , காயமடைந்த ஒவ்வொருவருக்கும் ரூ. 50,000 இழப்பீடும் வழங்கப்படும் என அறிவித்தார்.

Source link