செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் அதிகரித்து இருப்பதால் பல்வேறு துறைகளிலும் வேலையிழப்புகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக ஆரக்கிள் உள்ளிட்ட முன்னணி ஐடி நிறுவனங்களும் சமீப காலமாக ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஐடி, இ-காமர்ஸ் என பல துறைகளிலும் கொடி கட்டிப் பறக்கும் அமேசான் நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையை ஏற்கனவே எடுத்திருந்தது.
இந்த நிலையில், மேலும் 14 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. இது அந்நிறுவன ஊழியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமேசான், அடுத்த மாதம் 14 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் என்ற தகவலில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளது.
