வாஷிங்டன் டி.சி.
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து 4 நாட்களாக நடந்த தாக்குதலில் பள்ளி மாணவிகள் 180-க்கும் மேற்பட்டோர் உள்பட பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனை அரசு ஊடகங்கள் வெளியிட்டு உள்ள செய்தி உறுதிப்படுத்தி உள்ளது.
இதில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது.
இந்நிலையில், இந்திய பெருங்கடலில் இருந்த ஈரான் போர்க்கப்பலை அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று கடலுக்கு உள்ளே இருந்து குண்டுவீசி கடுமையாக தாக்கியது.
இதில் அந்த கப்பல் பல துண்டுகளாக உடைந்தும், வெடித்து சிதறியும், தீப்பற்றி எரிந்தும் போனது. கப்பலில் இருந்தவர்களில் பலர் உயிரிழந்து இருக்க கூடும் என கூறப்படுகிறது. அந்த கப்பலை, அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தாக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
2-ம் உலக போருக்கு பின் முதன்முறையாக இதுபோன்று நீருக்கடியில் இருந்து எதிரி நாட்டு கப்பல் ஒன்றை மூழ்கடிக்கும் தாக்குதல் நடந்து உள்ளது. அந்த போருக்கு பின்னர் இதனை நாங்கள் தற்போது செய்திருக்கிறோம் என அமெரிக்கா கூறியுள்ளது.
