நியூயார்க்,
ஒருகாலத்தில் சர்ச்சையால் செய்திகளில் இடம்பிடித்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்மீத் சிங், தற்போது அமெரிக்க அணிக்காக டி20 உலகக் கோப்பையில் விளையாடி வருவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2017 ஆம் ஆண்டு, மும்பை அந்தேரி ரெயில் நிலையத்தின் நடைமேடையில் கார் ஓட்டிச் சென்ற சம்பவத்தில் ஹர்மீத் சிங் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும் சரிவை ஏற்படுத்திய நிலையில், அவர் நீண்ட காலம் கிரிக்கெட் உலகத்திலிருந்து விலகி இருந்தார்.
இதற்கு முன், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ஹர்மீத் சிங் முக்கிய வீரராக இருந்தார். திறமையான இடதுகை பந்து வீச்சாளராக அவர் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, மீண்டும் தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் நோக்கில் ஹர்மீத் சிங் அமெரிக்காவிற்குச் சென்றார். அங்கு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த அவர், தற்போது அமெரிக்க அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.
