பனாஜி
கோவாவை சேர்ந்த வாலிபர் சோஹம் நாயக் (வயது 22). தெற்கு கோவாவில் கடந்த 3 ஆண்டுகளாக 25 முதல் 30 இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார். இதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து கொண்டு அவர்களை மிரட்டி வந்துள்ளார். வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என அச்சுறுத்தியதில், அவர்கள் பயந்து போய் புகார் எதுவும் தெரிவிக்காமல் இருந்து விட்டனர்.
இந்நிலையில், நண்பர்களுடன் வெளியிடத்தில் ஒன்றாக மதுபானம் குடித்து கொண்டு மதுபோதையில் இருந்தபோது, பாதிக்கப்பட்ட இளம் சிறுமிகள், பெண்களின் வீடியோக்களை அவர்களிடம் காட்டியுள்ளார். இதனை சுற்றியிருந்தவர்கள் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அளித்த தகவல் அந்த பகுதியில் பரவியது.
இதனால், அந்த பகுதியை சேர்ந்த மக்கள் காவல் நிலையத்திற்கு திரண்டு சென்று, சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, முற்றுகையிட்டனர். இதனையடுத்து அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து வீடியோக்களை ஆய்வு செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட அனைவரையும் அடையாளம் காணும் பணி மற்றும் அவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெறும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த சம்பவத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். சோஹம், பா.ஜ.க.வை சேர்ந்த தொழிலதிபரான சுஷாந்த் நாயக் என்பவரின் மகன் ஆவார். 3 ஆண்டுகளாக இளம் சிறுமிகள் பாதிக்கப்பட்டது தொடர்பான சம்பவம் பற்றி போலீசாரிடம் தகவல் எதுவும் தெரிவிக்கப்படாமல் இருந்தது பரவலாக கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளும், சட்டங்களும் அவசியம் என்று இந்த சம்பவம் எடுத்து காட்டுகிறது. வழக்கு தொடர்பாக போலீசாரின் தீவிர விசாரணை தொடர்ந்து வருகிறது.
