தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வடமட்டம் கிராமத்தில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளியின் வேன் டிரைவராக சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (50 வயது) என்பவர் பணியாற்றி வருகிறார். பள்ளி வேலை நேரம் முடிந்ததும் பள்ளியின் வேனை தனது வீட்டின் அருகே பெருமாள் நிறுத்தி வைத்திருப்பார். அப்போது அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகள் அந்த வேனில் ஏறி விளையாடுவது வழக்கம்.
இந்த நிலையில் சம்பவத்தன்று 4 வயது சிறுமி அந்த வேனில் ஏறி விளையாடி கொண்டிருந்தாள். அப்போது வேன் டிரைவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் திருநீலக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரை திருநீலக்குடி போலீசார் திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளி வேன் டிரைவர் பெருமாள், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர்.
