காங்கிரஸ் கட்சிக்கு பின்பாக கூட்டணியில் விசிகவுக்கு கூடுதல் இடங்களை வழங்கியுள்ளது திமுக. தொடர்ந்து கூட்டணிக்குள் சில சலசலப்புகள் நிலவி வந்த நிலையில், இன்று திமுக – விசிக இடையிலான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதனையடுத்து விசிக சார்பில் போட்டியிடும் தொகுதிகளுக்கான விருப்பப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
இரட்டை இலக்கத்தில் தொகுதிகள்
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் புதிய கட்சிகளின் வருகை காரணமாக, ஏற்கனவே கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் தொகுதிகளை குறைத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கூட்டணியில் உள்ள கட்சிகள் அப்செட் அடைந்தனர். குறிப்பாக திமுகவுடன் தொடர்ந்து பயணித்த வந்த விசிக, வரும் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.
விசிகவுக்கு எட்டு தொகுதிகள்
தொடர்ந்து இதனை திருமாவளவன் எம்பி வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் இன்று திமுக, விசிக இடையிலான தொகுதி பங்கீடு ஒப்பந்தமாகியுள்ளது. அதன்படி விசிகவுக்கு மொத்தம் எட்டு தொகுதிகள் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரட்டை தொகுதிகள் கேட்டு வந்த நிலையில், எட்டு தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார் திருமாவளவன். ஆறு தனித் தொகுதிகள், இரண்டு பொதுத் தொகுதிகள் என விசிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுகவிடம் வழங்கப்பட்டுள்ள விருப்பப் பட்டியல்
இந்நிலையில் விசிக சார்பில் இருந்து திமுகவிடம் கேட்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்தான விருப்பப் பட்டியல் குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி திருப்போரூர், நாகை, அரூர், செய்யூர், கள்ளக்குறிச்சி, காட்டுமன்னார் கோயில், மயிலம், பெரியகுளம், சிவகங்கை, குன்னம், புவனகிரி, கே.வி. குப்பம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வானூர் அல்லது திண்டுவனம் ஆகிய தொகுதிகள் விசிக தரப்பிலிருந்து கேட்கப்பட்டுள்ளது.
பானை சின்னத்தில் போட்டி
மேலும் சென்னை மாவட்டத்தில் ஒரு தொகுதியும் என மொத்தம் 15 தொகுதிகள் அடங்கிய விருப்பப் பட்டியலை திமுகவிடம் வழங்கியுள்ளது விசிக. இதனிடையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற காரணத்தால் பானை சின்னத்தில் தான் போட்டி என திருமாவளவன் எம்பி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனிடையில் இரட்டை இலக்க தொகுதிகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்த விசிக, தற்போது எதற்காக இடங்களை குறைத்து கொண்டுள்ளது என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
கூடுதல் இடங்கள்
அதே நேரம் சிபிஎம், சிபிஐ, மதிமுக ஆகிய கட்சிகள் தொகுதிகளை குறைத்து கொண்ட நிலையில், தற்போது விசிகவுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது விசிகவிற்கு வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. சிபிஎம் கடைசி வரை இடங்களை குறைத்து கொள்வதற்கு முரண்டு பிடித்த நிலையில், கடைசியில் ஒரு தொகுதியை குறைத்து கொண்டது.
இந்நிலையில் விசிகவுக்கு கடந்த முறை ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை கூடுதலாக இரண்டு இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு பின்பாக விசிகவிற்கு தான் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை மனநிறைவுடன் ஏற்றுக் கொள்வதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக கூட்டணிக்குள் நடந்து வந்த இழுபறிகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து தேமுதிக, மநீம கட்சியுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்வதற்கு திமுக முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
