பெங்களூரு,
கன்னட தொலைக்காட்சி நடிகை ஒருவர், ஸ்டேடியம் கழிப்பறையில் தன்னை ரகசியமாக வீடியோ எடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூருவில் உள்ள ஒரு மைதானத்தில் நடைபெற்ற மூன்று நாள் செலிப்ரிட்டி மகளிர் கிரிக்கெட் போட்டியில் நடிகை கலந்து கொண்டிருக்கிறார். அப்போது கடந்த 7-ம் தேதி, போட்டியின் இரண்டாவது நாளில் பெண்கள் கழிப்பறைக்கு அவர் சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரகசியமாக வீடியோ பதிவு செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோ பின்னர் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து நடிகையின் தோழி கணக்குக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, பணம் கேட்டு மர்ம நபர் மிரட்டியதாக நடிகை புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கன்னட தொலைக்காட்சி மற்றும் திரைப்பட துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
