சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல்களில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் தேசிய கட்சியான காங்கிரஸ் இடம்பெற்று வருகிறது. 5-வது முறையாக இந்த தேர்தலிலும் இடம்பெற்றுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும்போது எல்லாம், மந்திரி சபையில் திமுக இடம்பெற்றுள்ளது. ஆனால், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும்போது அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் கொடுத்தது இல்லை.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையுடன் திமுக செயல்பட்டு வருவதே அதற்கு காரணம். ஆனால், இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை காங்கிரஸ் தலைமை தொடர்ந்து திமுகவிடம் வலியுறுத்தி வருகிறது.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்து பேசியபோதும், ஆட்சியில் பங்கு, 41 தொகுதிகள், உள்ளாட்சியில் 20 சதவீத இடம் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முதலில் இருந்தே திமுக தலைமை மறுத்து வந்த நிலையில், அதில் இருந்து பின்வாங்கிக்கொள்ளவும் வலியுறுத்தியது. ஆனால், காங்கிரஸ் கட்சி நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதி மணி உள்ளிட்டோர், தொடர்ந்து ஆட்சியில் பங்கு என்று கோரிக்கை விடுத்துவந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் கூட்டாட்சி என்பதை ஏற்க முடியாது என்று தெளிவுபடுத்திவிட்டார். ஆனாலும், மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட செயற்குழு கூட்டத்தில், ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது திமுக தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இதனால், திமுக நிர்வாகிகள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை தொடர்பு கொண்டு, பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் போன்றோரை நீங்கள் கட்டுப்படுத்தவில்லை என்றால், 22-ந் தேதி தொடங்கும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கமாட்டோம் என்று கூறிவிட்டனர்.
இதனால், உடனே அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்த செல்வப்பெருந்தகை திமுக தலைமை கூறியதை தெரிவித்தார். ஆனாலும், இதுவரை பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ராகுல்காந்தி உத்தரவிட்டதன் அடிப்படையிலேயே அவ்வாறு அவர்கள் பேசி வருவதாக காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகின்றன. இதனால், காங்கிரஸ் தலைமை மீது தொடர்ந்து அதிருப்தியில் இருந்த திமுக, தற்போது தேமுதிகவை கூட்டணி வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளது.
இனி, நாம் கூறியதை காங்கிரஸ் கட்சி ஏற்றால் மட்டுமே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கலாம் என்றும், அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என்றால் வெளியே போகட்டும் என்றும் திமுக தலைமை கருதுகிறதாம். மொத்தத்தில், காங்கிரஸ் கட்சிக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
