சென்னை,
தமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவது தொடர்பான வழக்கு, சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, “இலவசங்களால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. தொடர்ந்து இலவசங்களை வழங்குவதால் மாநிலங்கள் நிதிப் பற்றாக்குறையில் உள்ளன. மானியமும், ஊதியம் வழங்குகிறீர்கள். இதைத் தவிர எந்த அரசும் எதுவும் செய்யவில்லை.
100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு நிதி எந்த வகையில் கிடைக்கிறது..?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள் அமர்வு, “பெரும்பாலான இந்திய மாநிலங்கள் ஏற்கனவே வருவாய் பற்றாக்குறையில் உள்ளன, ஆனால் நீண்ட கால வளர்ச்சி முன்னுரிமைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பெரிய அளவிலான இலவசங்களை தொடர்ந்து அறிவித்து வருகின்றன.
நிதி நிலைமையை பொருட்படுத்தாமல், சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் இலவச உணவு, மிதிவண்டிகள் அல்லது மின்சாரம் போன்ற முழுமையான திட்டங்களை வழங்குவதை விட, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் நிலையான வளர்ச்சி வழிகளை உருவாக்குவதிலும் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்தது.
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
