இந்தியா-அமெரிக்கா இடையே இணைப்பு புள்ளியாக செயல்படுவதில் கூகுள் பெருமையடைகிறது – சுந்தர் பிச்சை

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“நாம் அதீத முன்னேற்றம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சகாப்தத்தின் உச்சத்தில் இருக்கிறோம். ஆனால் சிறந்த விளைவுகளுக்கான உத்தரவாதம் இன்னும் அளிக்கப்படவில்லை.

செயற்கை நுண்ணறிவின் பயன்கள் அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் கிடைப்பதற்காக நாம் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும். இதில் இந்தியா-அமெரிக்கா கூட்டாண்மைக்கு முக்கிய பங்கு உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஒரு இணைப்பு புள்ளியாக செயல்படுவதில் கூகுள் பெருமையடைகிறது.

கூகுள் நிறுவனத்தின் முக்கியமான முயற்சிகளில் இரு நாடுகளிலும் உள்ள குழுக்கள் தடையின்றி இணைந்து செயல்படுகின்றன. ‘கூகுள் பே’(Google Pay) உள்பட இந்தியாவில் தொடங்கும் புதுமைகள், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சிறந்த தயாரிப்புகளை வழங்குகின்றன.

செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாவின் பயணம் அசாதாரணமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும், இந்த பயணத்தில், தயாரிப்பு அளவிடுதல்(Product Scaling) மற்றும் உள்கட்டமைப்பு(Infrastructure) உள்ளிட்ட அம்சங்களுடன் இந்தியாவிற்கு எங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link