கவுகாத்தி
சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 87-வது ஆண்டு எழுச்சி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமின், கவுகாத்தி நகரில் சி.ஆர்.பி.எப்.பின் 87-வது ஆண்டு அணிவகுப்பு இன்று நடத்தப்பட்டது.
இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு அதனை ஏற்று கொண்டார்.
இதன்பின்னர் நடந்த கூட்டத்தில் படையினரின் முன் அவர் உரையாற்றும்போது, சி.ஆர்.பி.எப்.பின் 86 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக, சி.ஆர்.பி.எப்.பின் எழுச்சி தினம் அசாமில் இன்று கொண்டாடப்படுகிறது.
இது நம் அனைவருக்கும் மற்றும் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களுக்கும் பெருமை தரக்கூடிய ஒரு விசயம் என கூறினார்.
வருடாந்திர அணிவகுப்பு ஆனது நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட வேண்டும் என கடந்த 2019-ம் ஆண்டில், நாங்கள் முடிவு செய்தோம். இன்று நம்முடைய வடகிழக்கு பகுதியில் இந்த பிரமாண்ட சி.ஆர்.பி.எப். அணிவகுப்பு நடைபெற்றதில் நான் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன் என கூறினார்.
