‘கனவே கலையாதே’, ‘மகிழ்ச்சி’ போன்ற படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் வ.கவுதமன். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘படையாண்ட மாவீரா’. வி.கே. புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தை வ.கவுதமனே இயக்கியும் நடித்தும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். மண்ணையும் மானத்தையும் காக்க, வீரம், ஈரம், அறம் ஆகியவற்றுடன் போராடி வாழ்ந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான இந்த படம், மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், ‘படையாண்ட மாவீரா’ தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் பார்க்க தவறியவர்கள், தற்போது ஓடிடியில் இந்த படத்தை கண்டு ரசிக்கலாம்.
