ஈரானில் இருந்து இந்திய மாணவர்கள் இடமாற்றம்

டெஹ்ரான்,

ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கடந்த 28-ந்தேதி அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் பலியானார். இதையடுத்து இஸ்ரேல், பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் உள்ளிட்ட பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்க தளங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவி ஈரான் பதிலடி கொடுத்தது. இது மத்திய கிழக்கில் மோதலை மேலும் அதிகரித்தது.

இஸ்ரேல், அண்டை வளைகுடா நாடுகள் மற்றும் உலகின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் முக்கிய இலக்குகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. தொடர்ந்து 5-வது நாளாக போர் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அங்குள்ள இந்திய மாணவர்களை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளது. தெஹ்ரான் நகரில் வசித்து வந்த 300 இந்திய மாணவர்களில் பெரும்பாலானவர்கள், அங்கிருந்து 140 கி.மீ தொலைவில் உள்ள கோம் போன்ற பாதுகாப்பான நகரங்களுக்குப் பஸ்கள் மூலம் மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் காஷ்மீரை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் ஆவர். மாணவர்களுக்கான போக்குவரத்து, உணவு மற்றும் தங்குமிட வசதிகளை இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது. நாளை (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ள மருத்துவத் தேர்வுகள் காரணமாக, டெஹ்ரானிலேயே சில மாணவர்கள் தங்கியுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஈரானில் உள்ள 9 ஆயிரம் இந்தியர்களுக்கும் இந்திய தூதரகம் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Source link