சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 57-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், பேரணியாக வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அந்த வகையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும் அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பிரசார வேனில் ஏறி அமர்ந்தபடி நிருபர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் தோழியும், டி.டி.வி.தினகரனின் சித்தியுமான சசிகலா, அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக காரில் வந்தார்.
டி.டி.வி.தினகரன் வேன் அருகே சசிகலா பயணம் செய்த கார் வந்தபோது, அதுகுறித்த தகவலை டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் அவரிடம் தெரிவித்தனர். உடனடியாக பேட்டியை முடித்துக்கொண்ட டி.டி.வி.தினகரன், வேனில் அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
சித்தி என்ற முறையில் சசிகலாவுக்கு பரஸ்பர வணக்கம் கூட டி.டி.வி.தினகரன் தெரிவிக்கவில்லை. இதனால், இருதரப்பு ஆதரவாளர்களும் செய்வதறியாது அங்கேயே திகைத்து நின்றனர். அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
