ஸ்ரீவைகுண்டம் கோவிலில் ரூ.1.28 கோடியில் புதிய தேர்: பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள நவகைலாயத் தலங்களில் 6-வது தலமான (சனி தலம்) கைலாசநாதர் கோவிலின் பழமையான தேர் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த பல ஆண்டுகளாக கோவில் சித்திரை திருவிழாவின் போது தேரோட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்தத் தேரை சீரமைத்துத் தர வேண்டும் என ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மற்றும் பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று, இந்த கோவிலுக்கு புதிய தேர் செய்வதற்கு பந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.1.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 40 சதவீத நிதி தனியார் பங்களிப்புடன் திரட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நேற்று கோவில் வளாகத்தில் புதிய தேர் செய்வதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த புதிய தேர் மிகுந்த கலைநயத்துடன் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில்; “தேர் செய்யும் பணியை விரைவாகவும், தரமாகவும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சித்திரை திருவிழாவின் போது, புதிய தேரோட்டம் மிக விமரிசையாக நடைபெறும்” என்று தெரிவித்தனர்.

Source link