சென்னை,
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து போர் தொடுத்துள்ளன. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதலை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இதனால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் வினியோகம் தடைபட்டுள்ளது.
எனவே இந்தியா குறுகிய காலத்துக்கு ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்து உள்ளது. இதனிடையே இந்தியாவிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய், எல்.பி.ஜி. கையிருப்பு உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நாடு முழுவதும் நள்ளிரவில் கேஸ் சிலிண்டர் விலை திடீரென உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.114.50-ம், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.60-ம் உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ரூ.1,929-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.114.50 உயர்ந்து ரூ.2,043.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
