வித்தியாசமான முக்கோண காதல் கதை. ஜியா சங்கரை ஒருதலையாக காதலிக்கும் மதும்கேஷ், அவரை பார்த்தாலே போதும் பரவசம் என்ற மனநிலையில் இருக்கிறார். ஆனால் ஜியா சங்கரோ, அவரது நண்பர் அர்ஜூன் அசோகனை காதலிக்கிறார். இதற்கிடையில் ஜியா சங்கர் திடீரென ஒரு வகை மறதி நோயால் பாதிக்கப்பட்டு போகிறார். அதாவது முந்தைய நாளில் என்ன நடந்தது? என்பது அடுத்த நாளில் மறந்து போகும் வியாதியில் சிக்கி அவதிப்பட்டு வருகிறார். அதாவது தூங்கி எழுந்தால் அனைத்துமே அவருக்கு மறந்துவிடும்.
இதனால் தான் யார் ? என்று தெரியாமல் தவித்து வரும் அவரிடம், புதிய காதலனாக அறிமுகமாகிறார் மதும்கேஷ். பல்வேறு பொய்களை சொல்லி அவருடன் காதலில் இருக்கிறார். ஒருகட்டத்தில் இந்த பொய்கள் பெரிய திருப்பங்களை உண்டாக்குகிறது. மதும்கேஷின் பொய்கள், ஜியா சங்கரின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது? இறுதியில் என்ன ஆனது? என்பதே பரபரப்பான மீதி கதை.
மனதில் உள்ள காதலை, வெளிப்படுத்த முடியாத ஏக்கத்துடன் சுற்றும் கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார், மதும்கேஷ். அவரது நடிப்பு படத்துக்கு பெரிய பலம். நிச்சயம் அவருக்கு பல வாய்ப்புகள் வரும்.
அழகு மற்றும் நடிப்பால் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்துள்ளார். மறதி பிரச்சினையால் அவதிப்படும் இடங்களில் அழுத்தமான நடிப்பை கொட்டியுள்ளார். அர்ஜுன் அசோகன், விஜி சந்திரசேகர், ஜெயப்பிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு ரசிக்க வைக்கிறது.
அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகளில் அழகு. ஹரிஷ் ஜெயராஜ் இசையில் பாடல்களில் உயிர்ப்பு. வித்தியாசமான திரைக்கதையில் காதலை கொட்டியுள்ள விதம் அழகு. லாஜிக் மீறல்கள் ஆங்காங்கே எட்டிப்பார்க்கிறது.
முக்கோண காதல் கதையை புதிய வடிவில் கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குனர் ஏ.எல்.விஜய், அதில் ஏமாற்றத்தை தரவில்லை.
