இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்குனராக அறிமுகமான முதல் திரைப்படம் தான் ‘ஆரண்ய காண்டம்’.2011ம் ஆண்டு வெளியான இப்படத்தை எஸ்.பிபி சரண் தயாரித்தார். இதில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ், யாஷ்மின் பொன்னப்பா, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் லீட் ரோலில் நடித்திருந்தனர்.
கமர்சியல் அம்சங்கள் இருந்தாலும் கதாபாத்திரங்களை எழுதிய விதம், தந்தை – மகன் உறவு என தன் முதல் திரைப்படத்திலேயே அழுத்தமான இயக்குநராக தடம் பதித்தார்.
இத்திரைப்படம் நியூயார்க்கில் நடந்த தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் பரிசை வென்றது. மேலும் இப்படம் சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருதை வென்றது. இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் முதல் திரைப்படமான ஆரண்ய காண்டம் இன்றுவரை சிறந்த தமிழ்ப்படங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரசிகர்கள், விமர்சகர்களிடம் பேசப்பட்ட இப்படத்தை வருகிற 13ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். தற்போது, தியாகராஜன் குமாரராஜா நடிகர் விஜய் சேதுபதியை வைத்து பாக்கெட் நாவல் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
