நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல்: தமிழக வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு

சென்னை,

தமிழகத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டிருந்த 6 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் 2-ந் தேதியுடன் நிறைவடைகின்றது. அதாவது, தி.மு.க. எம்.பி.க்கான திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோரின் பதவிக்காலமும், அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை, அ.தி.மு.க. ஆதரவு எம்.பி.யான ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகின்றன.

மார்ச் 16-ந் தேதி தேர்தல்

இந்த நிலையில், தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கும், வேறு மாநிலங்களில் காலியாகும் 31 பதவிகளுக்கும் சேர்த்து மார்ச் 16-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி முதல் மார்ச் 5-ந் தேதி வரை நடைபெற்றது.

தி.மு.க. தரப்பில் திருச்சி சிவா, கான்ஸ்டான்டைன் ரவீந்திரன் ஆகியோரும், தி.மு.க. கூட்டணியான காங்கிரஸ் தரப்பில் கிருஸ்டோபர் மாணிக்கமும், தே.மு.தி.க. தரப்பில் எல்.கே.சுதீசும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

7 சுயேச்சை வேட்பாளர்கள்

இதேபோல், அ.தி.மு.க. தரப்பில் மு.தம்பிதுரையும், அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ம.க. தரப்பில் டாக்டர் அன்புமணியும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதேபோல், டாக்டர் அன்புமணியின் மாற்று வேட்பாளராக சௌமியா அன்புமணியும், சுயேச்சை வேட்பாளர்களாக அக்னி ஆழ்வார், பா.இசக்கிமுத்து, ரெ.கந்தசாமி, சாமிநாதன், பத்மராஜன், மேஷாக் கிருபாகரன், கே.பி.எம்.ராஜா ஆகியோரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்புமனுக்கள் பரிசீலனை

இந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. இதில், டாக்டர் அன்புமணி, கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், கிருஸ்டோபர் மாணிக்கம், எல்.கே.சுதீஷ், மு.தம்பிதுரை, திருச்சி சிவா ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. டாக்டர் அன்புமணியின் மாற்று வேட்பாளரான சௌமியா அன்புமணி தனது வேட்புமனுவினை திரும்பபெற்றுக்கொண்டார். ஏனைய சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

போட்டியின்றி தேர்வு

இந்த நிலையில், வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, இன்று மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேர், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 2 பேர் என 6 பேரைத்தவிர வேறு யாரும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடாததால், மேற்கண்ட 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்

Source link