சிலிண்டர் தட்டுப்பாட்டை மத்திய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

சென்னை,

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

அமெரிக்க-இஸ்ரேலின் அடாவடியால் ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களைக் காரணம் காட்டி, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கையாளும் விதம் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதன் நேரடித் தாக்கமாகத் தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவத் தொடங்கியுள்ளது.

போர் சூழலால் கடல் வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், ஒன்றிய அரசு தரப்பில் தட்டுப்பாடு இல்லை என்று சொல்லப்படும் கூற்றுக்கும், கள நிலவரத்திற்கும் பெரும் முரண்பாடு உள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும் சிலிண்டர் நிறுவனங்கள் வெளிப்படையாகவே தட்டுப்பாட்டை உறுதி செய்திருப்பது, நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது.

இந்தத் திட்டமிடப்படாத தட்டுப்பாட்டினால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான சிறு மற்றும் குறு உணவகங்கள், தேநீர் விடுதிகள் உள்ளிட்ட நடுத்தர வணிக நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. போதிய எரிவாயு கிடைக்காத காரணத்தால் பல உணவகங்கள் ஏற்கனவே மூடப்பட்டு வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது வெறும் ஒரு வணிகச் சார்ந்த பாதிப்பு மட்டுமல்ல; அந்த நிறுவனங்களை நம்பி அன்றாடப் பிழைப்பை நடத்தும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இத்தகைய நிறுவனங்களின் நலன் கருதி, தட்டுப்பாடின்றி சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்தால் மட்டுமே, இந்தத் தொழில்களை முழுமையாக முடங்கும் அபாயத்திலிருந்து காப்பாற்ற முடியும். வணிகப் பயன்பாடு மட்டுமின்றி, வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது மிகுந்த கவலையளிக்கிறது.

சிலிண்டர் முன்பதிவு செய்து பல நாட்கள் கடந்தும் விநியோகம் செய்யப்படாததால், சாமானிய மக்கள் திண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வணிக ரீதியான பாதிப்பு பொருளாதாரத்தைச் சிதைக்கும் என்றால், வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாடு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் அடிப்படைத் தேவையைப் பாதிக்கும் நேரடிப் பிரச்சினையாகும். எனவே, ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் கூடுதல் தீவிர கவனம் செலுத்தி, போர்க்கால அடிப்படையில் மாற்று வழிகள் மூலம் எரிவாயு இறக்குமதியைச் சீர்செய்ய வேண்டும்.

சர்வதேசப் போர்ச் சூழலைக் காரணம் காட்டி உள்நாட்டு விநியோகத்தை முடக்குவது, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களின் வளர்ச்சியையும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் அடியோடு பாதிக்கும் செயலாகும். வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் மட்டுமின்றி, வீட்டு உபயோக சிலிண்டர்களும் எவ்விதத் தடையுமின்றி கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் மட்டுமே, பொதுமக்களின் இன்னல்களை தவிர்க்க முடியும். இந்த விவகாரம் ஒரு மிகப்பெரிய சமூகப் பொருளாதாரப் பேரிடராக மாறுவதற்கு முன்பே, மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link