தேர்தலில் போட்டியிட்டு, யாரையோ ஜெயிக்க வைப்பதை விட, தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக சேரலாமே.. – இயக்குனர் மோகன் ஜி

சென்னை,

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் சூழ்நிலை உள்ளது. தேர்தலுக்கு புது வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தால் தேர்தல் களம் ஆரம்பம் முதலே அனல் பறந்து வருகிறது. ஆளுங்கட்சியான தி.மு.க. 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு வலுவாக தேர்தலை சந்திக்கிறது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும் தி.மு.க.வை எதிர்க்க இந்த படை போதாது என்றே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை இணைப்பதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து வருகின்றன. இதற்கான, ஆலோசனையை ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியும், நடிகருமான பவன் கல்யாண், நடிகர் விஜய்யுடன் மேற்கொண்டார் என்ற பரபரப்பு தகவல் வெளியானது.

இந்நிலையில், தவெகவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்க ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் முயற்சித்து வருவதாக வெளியான செய்தியை குறிப்பிட்டு தனது கருத்தை இயக்குனர் மோகன் ஜி பதிவிட்டுள்ளார். அதில் “வெறும் 6, 7 தெரிந்த முகங்களை வைத்து தேர்தலி்ல் போட்டியிட்டு, வாக்குகளை பிரித்து யாரையோ 500, 1000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைப்பதை விட, NDA கூட்டணியில் இணைந்து செயல்படுவது புத்திசாலித்தனம்.. நடந்தால் மக்களுக்கு நல்லது” என்று கூறியுள்ளார்.

Source link