புதுடெல்லி,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தும் தாக்குதலும் அதற்கு பதிலடியாக மேற்காசிய நாடுகள் மீது ஈரான் நடத்தும் தாக்குதலும் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்வது தடைப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர்ச் சூழலால் ஹோர்மஸ் நீரிணை மற்றும் வான்வழித் தடங்கள் முடங்கியுள்ள நிலையில், சுமார் 45,000 இந்திய ஏற்றுமதி கன்டெய்னர்கள் வெளிநாடுகளுக்கு சென்றடைய முடியாமல் சிக்கி தவிக்கின்றன. 4 லட்சம் டன் பாஸ்மதி அரிசி உள்பட 1.5 பில்லியன் மதிப்புள்ள சரக்குகள் பாதி வழியிலேயே திருப்பி அனுப்பபடும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் இந்திய ஏற்றுமதிக்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வர்த்தகம் செய்ய ஒரு கன்டெய்னருக்கு ஒரு நாளைக்கு 800-1,500 டாலர்கள் வரை செலவாகும் பட்சத்தில், தற்போதைய நெருக்கடியால் ஏற்றுமதியாளர்கள் கூடுதலாக 3,000-5,000 டாலர்கள் வரை கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது.
