கொச்சி
பிரதமர் மோடி கேரளாவில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, இடது ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி என மாறி மாறி கேரளாவில் ஆட்சி நடந்து வருகிறது.
கேரளாவின் நன்மைக்காக இந்த நடைமுறைக்கு முடிவு ஏற்பட வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடியின் உத்தரவாதங்களுடன் கூடிய, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மக்கள் பணியாற்ற வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து அவர், வளைகுடா நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அரசு கைவிட்டு விடவில்லை. அவர்களுக்கு உதவ மத்திய அரசு தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்து வருகிறது என்றார்.
மேற்காசிய மோதல் விவகாரத்தில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி அரசியல் விளையாட்டை விளையாடி கொண்டிருக்கிறது. வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களின் நலன் மீது அந்நாட்டினர் அதிக கவனம் செலுத்துகின்றனர். அதற்காக அவர்களுக்கு நான் நன்றி கூறி கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.
