சென்னை,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து கேரள கவர்னர் ஆர்.வி.ஆர்லேகர் தமிழக கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார். இதைதொடர்ந்து ஆர்.வி.ஆர்லேகர் இன்று சென்னைக்கு வருகை தந்தார்.
தமிழ்நாட்டின் கவர்னராக கேரள கவர்னர் ராஜேந்திர ஆர்லேகர் இன்று (மார்ச் 12) பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ். ஏ. தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதற்கான பதவியேற்பு விழா கவர்னர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட மத்திய இணை மந்திரி எல்.முருகன் புதிய கவர்னரை சந்தித்து சால்வை அணிவித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழக கவர்னராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு, எனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் பணிகள் சிறப்பாக அமைந்திட எனது மனமார்ந்த வாழ்த்துகள்..!” என தெரிவித்துள்ளார்.
