சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கரூர் மாவட்டம், மூக்கணாங்குறிச்சி கிராமம் அருகே சின்ன மூக்கணாங்குறிச்சி விஜயபுரம் பகுதியைச் சேர்ந்த கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் தமிழ்மணியின் மகன் கவின் (23 வயது). இவர் நேற்று இரவு மட்டாறை அருகில் அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மற்றும் மனோஜ் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை கவின், செந்தில்குமார் என்பவர் நிலத்தில் வெட்டுக்காயத்துடன் சுயநினைவில்லாமல் கிடந்துள்ளார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பணியிலிருந்த மருத்துவர் பரிசோதனை செய்ததில் கவின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
முன் விரோதம் காரணமாக போதையில் கவின் கொல்லப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. கண்ணன், மனோஜ் ஆகியோர் மீது சந்தேகம் உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் ஈடுபட்டிருந்தாலும் அவர்களையும் கண்டுபிடித்து சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும். கோடைக்காலமான இப்போது குடிநீருக்குகூட தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. ஆனால் எவ்வித தட்டுப்பாடுமின்றி எங்கெங்கும் தாராளமாக கிடைக்கும் போதை பொருட்களால் இளைய சமுதாயம் சீரழிந்து உடன் இருந்தவரையே கொலை செய்யும் நிலைக்கு செல்லும் இளைஞர்களின் செயல் மிகுந்த கவலைக்குள்ளாக்குகிறது. இக்கொலைக்கு காரணமானவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்யவேண்டும்.
கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிவாரணம் அளிக்க வேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் தட்டுப்பாடின்றி கிடைக்கும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்தி இளைய சமூகத்தை போதை அரக்கனிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும். மேலும் இளைஞர்கள் போதைப்பழக்கம் உள்ள நண்பர்களிடமிருந்து விலகிநின்று தங்கள் உயிரையும், நல்ல எதிர்காலத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
