கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: 15-ந்தேதி சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகும் த.வெ.க. தலைவர் விஜய்

சென்னை,

த.வெ.க. தலைவர் விஜய், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூருக்கு சுற்றுப்பயணம் சென்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானார்கள். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

சம்பவத்துக்கு காரணம், பாதுகாப்பு குறைபாடுகள் என த.வெ.க. தரப்பில் சொல்லப்பட்டதால் காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. த.வெ.க. 2-ம் கட்ட தலைவர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லிக்கு வரவழைத்து விசாரித்தனர். இதனைத்தொடர்ந்து, கட்சியின் தலைவரான விஜய்க்கும் 2 முறை சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையில் கடந்த 10-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் விஜய் தரப்பில், டெல்லிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கேட்கப்பட்டது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அதுகுறித்த பணிகளில் ஈடுபட்டு இருப்பதாகவும், டெல்லிக்கு பதிலாக தமிழ்நாட்டில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணை நடத்துமாறும் விஜய் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் சி.பி.ஐ. அதிகாரிகள் விஜய்யை டெல்லிக்கு வருமாறு கூறி மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

அதன்படி, கரூர் வழக்கு தொடர்பான விசாரணைக்கு வருகிற 15-ந்தேதி நேரில் ஆஜராக விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விசாரணைக்காக வரும் 14-ந்தேதி மாலை தனி விமானம் மூலம் விஜய் டெல்லி செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Source link