அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஜனவரி 7ஆம் தேதி நடந்து முடிந்த பொதும் தேர்தலில் ஷேக் ஹசீனா வெற்றி பெற்று பிரதமரானார். இதன் மூலம் அவர் 5வது முறையாக மீண்டும் வெற்றி பெற்று பிரதமர் ஆக பதவியேற்றுள்ளார். தொடர்ச்சியாக நான்காவது முறையாக பிரதமர் பதவி ஏற்றுள்ளதன் மூலம் உலகின் மிக நீண்ட கால பிரதமராக பதவி வகிக்கும் அரசியல் தலைவர்களில் ஹசீனாவும் ஒருவர்.
இந்தியாவுடன் தொடர்ந்து நட்புறவைப் பேணி வரும் ஷேக் ஹசீனா, கடந்த பிப்ரவரி மாதம் 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை புரிந்தார். இதற்கு வங்கதேச தேர்தலில் ஹேக் ஹசீனாவுக்கு இந்தியா உதவியதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இதன் எதிரொலியாக ‘இந்திய பொருள்களைப் புறக்கணிப்போம்’ என்ற பிரசாரத்தை வங்கதேச எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி தொடங்கியது. இதற்கு பிரதமர் ஷேக் ஹசீனா தற்போது காட்டமாக பதிலளித்துள்ளார்.
பங்களாதேஷ் தேசிய கட்சி தலைவர்கள் இந்திய பொருள்களை புறக்கணிக்க வலியுறுத்துகின்றனர். அவர்கள் தங்கள் தங்கள் மனைவி கட்டியுள்ள இந்திய புடவைகளை எரிப்பார்களா? அப்படிச் செய்தால், உண்மையாகவே அவர்கள் இந்திய பொருள்களை புறக்கணிப்பதாக ஏற்றுக்கொள்ளலாம் என்று ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.
மேலும் இந்திய ஆடைகளை மட்டுமல்ல, மசாலா பொருள்களையும் அவர்கள் புறக்கணிப்பார்களா? வெங்காயம், பூண்டு, இஞ்சி உள்ளிட்ட சமையல் பொருள்களை இந்தியாவிலிருந்துதான் இறக்குமதி செய்கிறோம். இவற்றை பயன்படுத்தாமல் அவர்கள் சமையல் செய்து சாப்பிடுவார்களா? இதற்கு எதிர்க்கட்சி முதலில் பதில் கூற வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

