சென்னை,
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கொலைகள் உள்ளிட்ட குற்றங்கள் குறைந்து விட்டதாக அதிகாரிகளை வைத்து தி.மு.க. அரசு விளக்கமளிக்க வைத்திருக்கிறது. ஆனால், ஆட்சியாளர்களைப் போலவே, எந்த ஆதாரங்களும் இல்லாமல் பொய்யான புள்ளிவிவரங்களைக் கொண்டு தி.மு.க. ஆட்சியின் சீரழிவுகளைத் தடுக்க அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி படுதோல்வியில் முடிவடைந்திருக்கிறது. தி.மு.க. ஆட்சியின் அவலங்கள் மக்களை நேரடியாகத் தாக்கும் நிலையில், அவற்றை இனி திரை போட்டு மறைக்க முடியாது.
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நான், திமுக ஆட்சியில் கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கஞ்சா வணிகம் உள்ளிட்ட அனைத்து வகை குற்றங்களும் அதிகரித்து விட்டதாக ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டியிருந்தேன்.
தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்கள் பெருகி விட்டன என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே உரையாற்றினர். திருச்சி பொதுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட செய்திகள் தமிழ்நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதை குறைக்கும் நோக்குடன் உள்துறை செயலாளர் தீரஜ்குமார், காவல்துறையின் பொறுப்பு தலைமை இயக்குனர் வெங்கட்ராமன் உள்ளிட்டோரைக் கொண்டு சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தச் செய்திருக்கிறது திமுக அரசு.
ஆனால், திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைந்து விட்டன என்பதற்கான எந்தத் தரவுகளையும் அவர்களால் தர முடியவில்லை. மேலும், 2021-ம் ஆண்டு படுகொலைகள் தொடர்பாக உள்துறை செயலர் அளித்த தரவு தவறானது.
தமிழ்நாட்டில் 2021-ம் ஆண்டில் 1,597 படுகொலைகள் மட்டுமே பதிவாகியிருப்பதாக உள்துறை செயலாளர் கூறியிருக்கிறார். உண்மையில் அந்த ஆண்டில், 1,288 ஆண்கள், 452 பெண்கள், ஒரு திருநங்கையர் என மொத்தம் 1,741 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 1,672 பேர் 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள்; மீதமுள்ள 69 பேர் குழந்தைகள் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 144 கொலைகளை, அதாவது 8.27 சதவீத கொலைகளை மறைத்து தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக காட்டுவதற்கு தி.மு.க. அரசு முயல்கிறது. இதற்கு அதிகாரிகளும் துணை போவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற கொலைகள் தொடர்பான புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தன்னிச்சையாக தயாரித்து வெளியிடுவதில்லை. தமிழக அரசு தரும் புள்ளிவிவரங்களைத் தொகுத்து தான் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஒவ்வொரு ஆண்டும் ‘‘இந்தியாவில் நடந்த குற்றங்கள்’’ என்ற தலைப்பில் ஆவணமாக வெளியிடுகிறது. குற்றங்கள் தொடர்பான தரவுகளுக்கு அது தான் ஆகச்சிறந்த ஆவணம் ஆகும். இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்திருந்தும் கூட, தி.மு.க. ஆட்சியை காப்பாற்றுவதற்காக நேர்மையான அதிகாரிகள் என்று பெயரெடுத்த உள்துறை செயலாளரும், காவல்துறை பொறுப்பு தலைமை இயக்குனரும் பொய்யான புள்ளிவிவரங்களைத் தரக்கூடாது. அது அவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 2021, 2022, 2023 ஆகிய காலண்டர் ஆண்டுகளில் வெளியான குற்றங்களைத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தொகுத்து வெளியிட்டிருக்கிறது. அந்த 3 ஆண்டுகளிலுமே முந்தைய அதிமுக ஆட்சியின் முதல் மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற கொலைகளுடன் ஒப்பிட்டால், அனைத்து ஆண்டுகளிலுமே கொலைகளில் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதே தவிர குறையவில்லை.
1. திமுக ஆட்சியின் முதல் ஆண்டான 2021இல் நடந்த கொலைகள் 1741.
முந்தைய அதிமுக ஆட்சியின் முதல் ஆண்டான 2016-இல் நடந்த கொலைகள் 1683.
திமுக ஆட்சியில் 58 (3.44 சதவீதம்) கொலைகள் அதிகம்.
2. திமுக ஆட்சியின் இரண்டாம் ஆண்டான 2022&இல் நடந்த கொலைகள் 1756.
முந்தைய அதிமுக ஆட்சியின் இரண்டாம் ஆண்டான 2017&இல் நடந்த கொலைகள் 1613.
திமுக ஆட்சியில் 143 (8.86 சதவீதம்) கொலைகள் அதிகம்.
3. திமுக ஆட்சியின் மூன்றாம் ஆண்டான 2023&இல் நடந்த கொலைகள் 1742.
முந்தைய அதிமுக ஆட்சியின் மூன்றாம் ஆண்டான 2018&இல் நடந்த கொலைகள் 1631.
திமுக ஆட்சியில் 111 (6.80 சதவீதம்) கொலைகள் அதிகம்.
மேற்கண்ட புள்ளிவிவரங்களுக்கான ஆதாரங்களாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட ஆவணங்களை இணைத்திருக்கிறேன். திமுக ஆட்சியில் கொலைகள் உள்ளிட்ட குற்றங்கள் குறைந்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் முதல்-அமைச்சர் அவர்களோ, அமைச்சர்களோ, அதிகாரிகளோ இது குறித்து விவாதம் நடந்த விரும்பினால், அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். அதற்கு மாறாக, மக்களை ஏமாற்றும் நோக்குடன் பொய்யான புள்ளிவிவரங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்ற முயல்வது அழகல்ல.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் 2020-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட குற்றங்களின் எண்ணிக்கை 4,338 ஆக இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2021-ஆம் ஆண்டில் 6,064 ஆகவும், 2022-ஆம் ஆண்டில் 6,580 ஆகவும், 2023-ஆம் ஆண்டில் 6,968 ஆகவும் அதிகரித்திருக்கிறது. இதற்கான ஆதாரங்களையும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது திமுக ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான சாதாரணக் குற்றங்களின் எண்ணிக்கை 2,630 (60.62 சதவீதம்) அதிகரித்திருக்கிறது.
அதேபோல், போக்சோ எனப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின்படி அதிமுக ஆட்சியில் 2020-ம் ஆண்டில் 3,057 வழக்குகள் பதிவாகியிருந்தன. அது 2021-ம் ஆண்டில் 4,415, 2022-ம் ஆண்டில் 4,906, 2023-ம் ஆண்டில் 4,581, 2024-ம் ஆண்டில் 6,975 ஆக அதிகரித்திருக்கிறது. 2020-ம் ஆண்டு இதே சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகளுடன் ஒப்பிடும் போது இது 3,818 அதாவது 124.89 சதவீதம் அதிகம் ஆகும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்பதையே இந்த தரவுகள் காட்டுகின்றன. இதை ஆட்சியாளர்களால் மறுக்க முடியுமா?
போக்சோ குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதை மறுக்க உள்துறை செயலாளரிடமும், காவல்துறை தலைமை இயக்குனரிடமும் எந்த தரவுகளும் இல்லை. அதனால், Statistics -யை பற்றிக் கவலைப்படக்கூடாது என்பதால் போக்சோ வழக்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும், அதனால் பாதிக்கப்பட்டோர் அளித்த அனைத்துப் புகார்களையும் வழக்குகளாக பதிவு செய்ததால் தான் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக காவல்துறை தலைமை இயக்குனர் சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார்.
இதில் கொடுமை என்னவென்றால், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட நிகழ்வில், மாணவி காணாமல் போன பின் 24 மணி நேரம் கழித்து தான் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மாணவி காணாமல் போன ஒரு மணி நேரத்திலேயே அது குறித்து காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகாரளித்தனர்.
அப்போதே காவல்துறை வழக்குப் பதிவு செய்து தேடத் தொடங்கியிருந்தால் மாணவியை எந்த பாதிப்பும் இல்லாமல் மீட்டிருக்கலாம். ஆனால், மாணவியின் பெற்றோர் அளித்த புகாரை ஏற்க விளாத்திக்குளம் அனைத்து மகளிர் காவல்நிலையம் மறுத்து விட்டது. இதற்காக காவல் ஆய்வாளர் பிரவீணா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மக்கள் அளிக்கும் புகார்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கும் லட்சணம் இந்த நிலையில் இருக்கும் போது, போக்சோ குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதிக புகார்களை பெற்று வழக்குப் பதிவு செய்ததால் தான் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக காவல்துறை பொறுப்பு தலைமை இயக்குனர் கூறுவது நகைமுரணாக இருக்கிறது.
ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மழை நீரை அணை கட்டி தடுக்க முடியும். ஆனால், காட்டாற்று வெள்ளத்தை வெறும் கைகளால் தடுக்க முடியாது. தமிழகத்தின் நிலைமையும் அப்படித் தான் இருக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கும், மக்களுக்கு பாதுகாப்பும் இல்லாததால் ஆட்சியாளர்களுக்கு எதிரான கோபம் மக்களிடம் சுனாமி பேரலையாக உருவெடுத்துள்ளது.
தி.மு.க. ஆட்சியின் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் புழக்கத்தாலும், சட்டம், ஒழுங்கு சீர்குலைவாலும், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொய்யான புள்ளிவிவரங்களைக் கூறி அவர்களை ஏமாற்ற முடியாது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது என முடிவு செய்து விட்ட மக்கள், அதை வரும் தேர்தலில் செயல்படுத்திக் காட்டுவது உறுதி.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
