நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். முன்னதாக நேற்று சபாநாயகரை நோக்கி காகிதங்களை கிழித்து எறிந்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
எதிர்க்கட்சி எம்.பிக்களின் இடைநீக்கத்துக்கு கண்டனம் தெரிவித்து இன்று காலை மக்களவை கூடியவுடன் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகளை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். பின்னர் அவை கூடியதும் மீண்டும் அமளி நீடித்தது.
இதனால் பிற்பகல் 2 மணி வரை அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார். 2 மணிக்கு அவை நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அப்போதும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவையை மாலை 5 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். மாலை 5 மணிக்கு ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பிரதமர் மோடி பேச உள்ளார்.
