மொஜ்தபா காமேனியின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

டெஹ்ரான்,

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்தது. இந்நிலையில், அயதுல்லா அலி காமேனி மறைவுக்கு பின்னர், ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்ந்தெடுக்கப்பட்டார்

இந்நிலையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் மகன் மொஜ்தாபா கமேனியின் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக நேற்று ஜெருசலேமில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானுக்கு எதிரான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு நடவடிக்கை குறித்து பேசியதாவது:-

போர் எதிர்பார்த்ததை விட மிக சரியாக சென்று கொண்டிருக்கிறது. இஸ்ரேல் – ஈரான் இடையிலான நேரடி மோதல் மிகவும் தீவிரமாகவும் வலிமையாகவும் உள்ளது. ஈரானின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனியின் உயிருக்கு “எந்தவிதமான உத்திரவாதமும் இல்லை”. ஈரான் மக்களுக்காக அந்த நாட்டில் நடைபெற்ற கொடுங்கோல் ஆட்சியை அகற்றுவதற்கான சூழலை உருவாக்குவதற்காகவே அமெரிக்காவும், இஸ்ரேலும் செயல்பட்டு வருகிறது.

ஈரானில் நாங்கள் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் மற்றும் பாசிஜ் படைகள் மீதுபலத்த தாக்குதல்களை நடத்தி வருகிறோம். மேலும் நாங்கள் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம். இனி அவர்கள் தப்ப முடியாது

ஈரான் மக்கள் சுதந்திரம் நோக்கிய ஒரு புதிய பாதையில் அடியெடுத்து வைப்பதற்கான அந்தத் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாங்கள் உங்கள் பக்கம் நிற்கிறோம். உங்களுக்கு உதவி வருகிறோம். ஆனால் இறுதியில் முடிவு எடுப்பது உங்கள் கைகளிலேயே உள்ளது”

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ஈரானில் இஸ்ரேல் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டு வருமா..? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஒருவரை நீங்கள் நீர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லலாம்; ஆனால் அவரை நீர் அருந்தும்படி கட்டாயப்படுத்த முடியாது. மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டோம்.

வான்வழித் தாக்குதல்கள் உள்ளிட்ட, இதற்கு உகந்த மிகச்சிறந்த சூழல்களை நாங்கள் உருவாக்குவோம். தற்போதைய ஆட்சியை வலுக்கட்டாயமாக அகற்றுவதற்காக படைகளை களமிறக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம்.

இந்தப் போருக்குப் பிறகு, அனைத்தும் முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய உலகமாக அமையும். தற்போதைய இந்தப் போரில் இஸ்ரேல் தன் கைவசம் “பல ஆச்சரியங்களை” வைத்துள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “அமெரிக்காவுடன் நாங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையிலான ஒரு கூட்டணியை உருவாக்கி உள்ளோம். எங்கள் சிறந்த நண்பரும், எனது தனிப்பட்ட நண்பருமான ஜனாதிபதி டிரம்புடன் அமைந்த ஒரு கூட்டணி அது. நாங்கள் ஏறக்குறைய தினமும் பேசிக்கொள்கிறோம். நாங்கள் வெளிப்படையாகப் பேசுகிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பரிமாறிக்கொள்கிறோம். இணைந்து முடிவுகளை எடுக்கிறோம். இன்றைய போரை மட்டும் பார்க்கவில்லை, நாளை அமையப்போகும் அமைதியான உலகத்தைப் பார்க்கிறோம்” என்று நெதன்யாகு கூறினார்.

Source link