ரஷ்ய அதிபர் புதினுக்கு டிரம்ப் ஆதரவளிப்பதால் அமெரிக்காவின் ஜனநாயகம் பெரும் ஆபத்தில் உள்ளதாக சாடிய அதிபர் ஜோ பைடன் தாம் ஒருபோதும் ரஷ்யாவுக்கு தலைவணக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தொடக்கத்திலேயே முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பை கடுமையாக சாடினார். அமெரிக்காவின் ஜனநாயகம் டிரம்ப்பால் அபாயகட்டத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாட்டின் சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் சாடிய அவர், டிரம்ப்பின் குடியரசுக் கட்சி ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பதாகக் கூறினார்.
ஏற்கனவே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீது நாட்டு மக்கள் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் முடிவுக்கு அந்நாட்டு மக்கள் கண்டனக் குரல்களை எழுப்பி வருவதுடன் ஆங்காங்கே போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் பைடனின் உரையின்போது மக்கள் “இன்னும் 4 ஆண்டுகள்” என ஆரவாரம் எழுப்பினர்.
தொடர்ந்து, கடந்த அதிபர் தேர்தலின்போது டிரம்ப்பின் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவரது ஆதரவாளர்கள் செய்த தாக்குதல் சம்பவங்களைக் குறிப்பிட்டு கண்டித்த அவர், தமக்கு ஒருபோதும் புடினுக்கு தலை வணங்க வேண்டிய அவசியம் வந்ததில்லை எனவும் தமது ஆட்சியில் அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது எனவும் கூறினார்.

