இந்து மக்கள் கட்சி மாநாட்டிற்கு திமுக அரசு அனுமதி வழங்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இந்து மக்கள் கட்சி சார்பாக சென்னையில் வரும் மார்ச் 15 ஆம் தேதி ஒய்.எம்.சி.ஏ உள்ளரங்கில் தமிழ், தமிழர், தமிழகம் உரிமை மீட்பு மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் அதற்குத் திமுக அரசு அனுமதி மறுத்து, சுவரொட்டி மற்றும் விளம்பரங்களைப் பறிமுதல் செய்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது.

தாங்கள் நடத்தும் வெற்று விளம்பர பிரம்மாண்ட மாநாடுகளுக்கும், தங்களது கூட்டணிக் கட்சியினர் நடத்தும் தேவையற்ற போராட்டங்களுக்கும் உடனடியாக அனுமதி வழங்கும் திமுக அரசு, மாற்றுக்கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அனுமதி மறுத்து முடக்க நினைப்பது ஏன்? திமுகவின் தமிழர் விரோத முகம் மக்கள் முன்பு அம்பலப்பட்டுவிடும் என்ற பயமா? அல்லது, யார் எதிர்க்க முடியும் என்னும் அதிகாரமா?

அரசியல் காழ்ப்புணர்ச்சி மேலோங்க, தனது பாசிச கரங்களால் தொடர்ந்து ஜனநாயக உரிமையைப் பறிக்கும் திமுக அரசின் அராஜகம் இனியும் செல்லுபடியாகாது என்பதை உணர வேண்டும். உடனடியாக இந்து மக்கள் கட்சியின் மாநாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link